பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் குன்னூர் ராணுவ மைய பகுதிகள், வெலிங்டன் கன்டோண்மென்ட் வாரியம், கார்டைட் தொழிற்சாலையில் நாடாளுமன்ற நிலைக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் பகுதியில் ராணுவப் பயிற்சிக் கல்லூரி, மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை, வெலிங்டன் கன்டோண்மென்ட் வாரியம் ஆகியவை பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான கந்தூரி தலைமையிலான 7 பேர் அடங்கிய நாடாளுமன்ற நிலைக் குழுவினர் வெலிங்டன் கன்டோண்மென்ட் வாரியத்திற்கு வருகை தந்தனர். இவர்களுக்கு அதிகாரிகள், ஊழியர்கள் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து அலுவலகத்தில் திட்டப் பணிகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
பின்னர் உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் கந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.ஆர்.சி. ராணுவப் பயிற்சி கல்லூரி உள்பட இங்குள்ள மையங்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறியப்பட்டது. தற்போது மேம்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்த அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இங்கு மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்குவது குறித்து அறிக்கை சமர்ப்பித்த பிறகே அறிவிக்கப்படும் என்றார்.
நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர் அம்பிகா சோனி, வெலிங்டன் ராணுவ மையத் தலைவர் சாங்வான், கன்டோண்மென்ட் முதன்மை அதிகாரி ஹாரிஷ் வர்மா, முதன்மைப் பொறியாளர் சுரேஷ், கன்டோண்மென்ட் துணைத் தலைவர் எம் .பாரதியார், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.