மழையால் உருக்குலைந்து கிடக்கும் வயநாடு மாவட்ட நகரங்கள்

தொடர் கன மழையால் கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்ட நகரங்கள் உருக்குலைந்துள்ளன. கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் தொடர் கன மழையால் அங்குள்ள ஆறுகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் வெள்ளப் பெ

தொடர் கன மழையால் கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்ட நகரங்கள் உருக்குலைந்துள்ளன.
கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் தொடர் கன மழையால் அங்குள்ள ஆறுகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக வன எல்லையையொட்டி கேரள மாநில மலைப் பகுதியில் வயநாடு, மலப்புரம் மாவட்டங்கள் அமைந்துள்ளதால் வனத்தில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளம் புகுந்து இந்த நகரங்களை உருக்குலைத்துள்ளது.
மலைச் சரிவுகளில் இருந்த வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் நிலச்சரிவால் மண்ணில் புதைந்துள்ளன. மீட்புப் பணியே செய்யமுடியாத அளவுக்கு சில இடங்களில் வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. மலப்புரம் மாவட்டத்தின் நிலம்பூர், எடக்கரா, வண்டூர் போன்ற நகரங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தின் மானந்தவாடி, பனமரம், வைத்திரி, கல்பட்டா உள்ளிட்ட நகரங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றன. வயநாடு மாவட்டத்தில் மட்டும் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தவர்களுக்காக 120க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முகாம்களில் உள்ளவர்களுக்குத் தேவையான உணவு, உடை, கம்பளி ஆடைகள், மருந்துப் பொருள்கள், பள்ளி மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை நன்கொடையாக வழங்கி உதவ வேண்டும் என்று வயநாடு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மீட்புப் பணிக்கான பொருள்கள் மற்றும் இதர நன்கொடைகளை கல்பட்டாவிலுள்ள வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com