பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புதன்கிழமை பத்திரப் பதிவு மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு செவ்வாய்க்கிழமை முதல் இணையதளத்தின் மூலம்தான் பத்திரப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பெ.நா.பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இணையதள தொடர்பின்மையினால் ஏற்பட்ட கோளாறினால் பத்திரப் பதிவு முழுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பத்திரப் பதிவுக்காக புதன்கிழமை காலையிலிருந்து திரளான பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால், இணையதளப் பிரச்னையால் மாலைவரை 2 பேருக்குதான் பத்திரப் பதிவு செய்யமுடிந்தது. இதனால் அலுவலகத்தின் காத்திருந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.