அன்னூர் ஒன்றியம், மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் பூட்டை உடைத்து 4 பேட்டரிகளை மர்மநபர்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனர்.
அன்னூர் ஒன்றியம், மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சி அலுவலகத்துக்கு அருகில் கிளை நூலகம் உள்ளது. அந்த நூலகத்தின் நூலகர் வழக்கம் போல் சனிக்கிழமை காலை நூலகத்தை திறக்க வந்துள்ளார்.
அப்போது அருகில் இருந்த ஊராட்சி அலுவலகத்தின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு ஊராட்சி செயலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்குத் தகவல் தெரிவித்துளார்.
இதையடுத்து அதிகாரிகள் வந்து பார்த்தபோது, அலுவலகத்தின் மெயின் கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று பீரோவையும் மர்மநபர்கள் உடைத்துள்ளது தெரிந்தது. ஊராட்சி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பை சேகரிக்கும் வாகனத்தில் இருந்த நான்கு பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் ஏதும் திருடப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து அன்னூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.