மேல்பஜார் அரசுப் பள்ளி முன்பு நிற்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்
மஞ்சூரில், மேல்பஜார் அரசுப் பள்ளி முன்பு நிற்கும் வாகனங்களால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மஞ்சூர் மேல்பஜாரில் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் பள்ளி, கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலை, பேரூராட்சி அலுவலகம், வங்கிகள், அரசு அலுவலங்கள், குடியிருப்புகள், கடைகள் உள்ளிட்டவை உள்ளன. மேலும், பிக்கட்டி, முள்ளிக்கூர், கிண்ணக்கொரை, கோரகுந்தா, மேல்பவானி, இரியசீகை, மேல்குந்தாஉள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வரும் அரசுப் பேருந்துகளும் மேல்பஜார் வழியாகவே சென்று வருகின்றன.
இதனால், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நடமாட்டத்துடன், வாகனப் போக்குவரத்தும் இப்பகுதியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில், மேல்பஜார் பகுதியில் போதிய இடம் இல்லாத நிலையில் பெரும்பாலான தனியார் வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஒழுங்கற்ற முறையில், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் மேல் பஜார் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பல நேரங்களில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடக்கூட முடியாத நிலை நிலவுகிறது.
இந்நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு, சாலையோரம் திங்கள்கிழமை ஏராளமானோர் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரை மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதையடுத்து, காவல் துறையினர் அங்கு சென்று போக்குவரத்தைச் சீரமைத்தனர்.
இந்நிலையில், இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.