காதலர் தினத்தையொட்டி, கொய் மலர்களுக்கு கடும் தேவை ஏற்பட்டுள்ளதால் அதன் விலையும் உச்சத்தை எட்டியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தேயிலைத் தொழில் நலிவடைந்தது. இதனால் அத்தொழிலுக்கு மாற்றாக மலைத் தோட்டக் காய்கறி விவசாயம் மட்டுமல்லாமல் குடில்கள் மூலமாக இம்மாவட்டதின் காலநிலைக்கு ஏற்றவாறு வளரும் தன்மை கொண்ட கொய் மலர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
இதற்காக அரசு சார்பில் தோட்டக் கலைத் துறை உதவியுடன் வங்கிக் கடன் பெற்று பசுமைக் குடில் அமைத்து விவசாயம் மேற்கொள்ள பெரும்பாலானோர் ஆர்வம் காட்டினர். இதன்மூலமாக திருமண நிகழ்ச்சிகள் மட்டுமின்றிப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுவதுடன், ஏற்றுமதி செய்யப்படும் இந்த மலர் சாகுபடியில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் கொய் மலர்களை சந்தைப்படுத்தி, விற்பனை செய்ய, உதகையில் உள்ள கொய் மலர் ஏல மையம் செயல்படாததால், வர்த்தகர்கள், இடைத்தரகர்கள் நேரடியாகவே விவசாயிகளிடம் கொய் மலர்களை வாங்கிச் செல்கின்றனர். கடந்த காலங்களில் இந்த மலர்களுக்கு கடும் தேவை இருந்தது. இதனால் கார்னேசன், லில்லியம், ஜெர்பரா, ரோஜா மலருக்கும் நல்ல விலை கிடைத்து வந்தது. மேலும், மும்பை, தில்லி, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கும் பெரும்பாலானோர் ஏற்றுமதி செய்கின்றனர். இந்நிலையில், காதலர் தினம் பிப்ரவரி 14-ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில், கொய் மலர் ஒன்றுக்கு ரூ. 8 முதல் ரூ. 13 வரை விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இதற்காகத் தயார் நிலையில் உள்ள கொய் மலர்களை ஏற்றுமதி செய்யவும், உள்ளூர் விற்பனைக்கு அனுப்பவும் தேவையான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.