கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு "பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி' என்ற தலைப்பில் அறிவுத் திறன் போட்டி திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
அருவி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணி தலைமை வகித்தார். அருவி அறக்கட்டளை நிறுவனர் பாலசுப்ரமணி முன்னிலை வகித்தார். ஈளாடா அரசு மேல்நிலைப் பள்ளி கல்விக் குழுத் தலைவர் சோழா மகேஷ் வரவேற்றார்.
கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில் "பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி' என்ற தலைப்பில், கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவியம் மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள், அதைத் தடுக்கும் முறைகள், பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக துணிப் பை, பாக்கு மட்டை பயன்படுத்துவது ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட சாரணர் இயக்கத் தலைவர் சிவராஜ், நிர்வாகிகள் பசுவராஜ், பீமராஜ், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர், மாணவர் தரீஷ் நன்றி கூறினார்.