நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் செவ்வாய்க்கிழமை இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக வேட்பாளர் எம்.தியாகராஜன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணனுடன் மேலூர், ஆருகுச்சி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். உதகை நகரிலேயே தனது பிரசாரத்தையும் நிறைவு செய்தார்.
அதேபோல, திமுக வேட்பாளர் ஆ.ராசா கடநாடு, தும்மனட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த பின்னர் சோலூர் கிராமத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். அவருடன் மாவட்ட திமுக செயலர் பா.மு.முபாரக், முன்னாள் அமைச்சர் கா.ராமச்சந்திரன், உதகை சட்டப்பேரவை உறுப்பினர்ஆர்.கணேஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பிரசாரத்தில் பங்கேற்றனர்.
அமமுக வேட்பாளர் எம்.ராமசாமி கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கூடலூரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். அவருடன் தமிழக தாட்கோ வாரிய முன்னாள் தலைவர் கலைச்செல்வன், கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில அமைப்பாளர் தம்பி இஸ்மாயில் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். வேட்பாளர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் தங்களது பிரசாரத்தை நிறைவு செய்கின்றனரா என்பதை தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் பின்தொடர்ந்து கண்காணித்தனர்.