கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை எளிமையான வகையில் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
72வது சுதந்திர தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசியக் கொடியேற்றி வைக்கிறார். தொடர்ந்து காவலர்களின அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். அத்துடன் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நிறைவடைந்து விடுகின்றன.
வழக்கமாக சுதந்திர தினத்தன்று நடைபெறும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடப்பாண்டில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாகப் பெய்த கன மழையால் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், கொண்டாட்டங்களைத் தவிர்த்து எளிமையான வகையில் நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.