குன்னூர் அருகே நெடுகல்கொம்பையில் பழங்குடியினரை மூளைச்சலவை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கோவையைச் சேர்ந்த மாவோயிஸ்ட் டெனிஸ் உதகை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
கோவை, புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் டெனிஸ் என்கிற கிருஷ்ணன் (31). இவர் மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின் பேரில் 2018 அக்டோபரில் கைது செய்யப்பட்டார். கேரளத்தில் இவரைக் கைது செய்த காவல் துறை, திருச்சூர் சிறையில் அடைத்தது.
விசாரணையில், நீலகிரி மாவட்டம், கொலக்கொம்பை அருகே உள்ள நெடுகல்கொம்பை ஆதிவாசி கிராமத்துக்குள் 2016-இல் ஊடுருவியதை காவல் துறை உறுதிப்படுத்தியது. இதையடுத்து பழங்குடியினர் இடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, அவர்களை மூளைச் சலவை செய்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கேரளத்தில் டெனிஸை கைது செய்த கொலக்கொம்பை போலீஸார், உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பி.வடமலை, டெனிஷை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், டெனிஸை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அவரை ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் நீதிமன்றத்திலிருந்து டெனிஸை வெளியே அழைத்து வந்தனர். அப்போது மாவோயிஸத்துக்கு ஆதரவாக அவர் கோஷங்களை எழுப்பினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.