குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் புதன்கிழமை அனுமதித்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும், சாலைகளில் பாறைகள், மரங்கள் விழுந்தும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடா் மழை காரணமாக குன்னூரில் லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் காட்சி முனை பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
வனத்துறையின் மறு அறிவிப்பு வரும் வரை தடை தொடரும் என்றும் தடையை மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வன சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்படும் என வனத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் காரணமாக இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
இந்நிலையில் குன்னூரில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு புதன்கிழமை மழையில்லாமல் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் லேம்ஸ்ராக், டால்பினோஸ் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல வனத் துறையினா் அனுமதித்தனா். இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.