முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பப்காடு யானைகள் முகாமில் தற்போது 24 யானைகள் உள்ளன. இதில் புதிய வரவாக சமயபுரத்தில் இருந்து வந்த கோயில் யானை மசினியும் இடம் பெற்றுள்ளது. இங்கு புதன்கிழமை மாலை யானை பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 9 யானைகள் மட்டுமே பங்கேற்றன. இந்த யானைகளுக்கு கரும்பு, வெல்லம், பொங்கல் மற்றும் வழக்கமான உணவுகளுடன் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன.
எளிமையாக நடத்தப்பட்ட இந்த விழாவில் சிறப்பு உணவுகளை முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் புஷ்பாகரன் வழங்கினார். தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 யானைகள் இருந்தும் குறைந்த அளவிலேயே யானைகள் பங்கேற்றதற்கு மஸ்து (பாலியல் உணர்வு) பிரச்னையே காரணம் என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல, இந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் மசினி யானையும் பங்கேற்கவில்லை. அதற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் தனி இடத்தில் வைத்து அதற்கு சிகிச்சையளித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். யானை பொங்கல் விழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடக மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தெப்பக்காட்டில் குவிந்திருந்தனர்.