ஜென்ம நில சட்டதிருத்த மசோதாவைக் கண்டித்து, திமுக சார்பில் கூடலூர் மாவட்ட வன அலுவலர் அலுவலகம் முன்பு வரும் ஜனவரி 24 ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக நிர்வாகிகள் கூட்டம் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினர் திராவிடமணி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கூடலூர் பிரிவு-17 நிலங்களை பிரிவு-53 இன் கீழ் வன நிலமாக மாற்றும் சட்ட திருத்த மசோதா சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்களை பாதிக்கும் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து வரும் ஜனவரி 24 ஆம் தேதி கூடலூரிலுள்ள மாவட்ட வன அலுவலர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கபப்ட்டது.
கூட்டத்தில், கூடலூர் நகரச் செயலாளர் ராஜேந்திரன், நெல்லியாளம் நகரச் செயலாளர் காசிலிங்கம், ஒன்றியச் செயலாளர்கள் லியாகத் அலி, சிவானந்தராஜா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், முன்னாள் ஒன்றியச் செயலாளர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.