நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவோர் உதகையில் இரு இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மூலம் கடந்த 18 ஆம் தேதி வரை ரூ. 1. 42 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததன் மூலம் ரூ.16 லட்சத்து 80, 510 விடுவிக்கப்பட்டுள்ளது. உதகையில் பொதுத்துறை வங்கி ஒன்றின் வாகனத்திலிருந்து ஏடிஎம் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டதற்கு விதிமுறை மீறப்பட்டதே காரணம்.
சாலைகள், நடைபாதைகள் மற்றும் கூட்டம் நடத்தும் இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கு கண்டிப்பாக தற்காலிக அனுமதி பெற வேண்டும். ஆம்புலன்ஸ்கள், அமரர் ஊர்திகள் உள்ளிட்ட வாகனங்களிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளராக மும்பை வருமான வரித் துறை ஆணையர் கிப் ஜெல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) முதல் தேர்தல் செலவினம் தொடர்பான பணிகளைக் கண்காணிப்பார் என்றார்.
இக்கூட்டத்தில் குன்னூர் சார் ஆட்சியர் ரஞ்சித் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், உதகை கோட்டாட்சியர் அருண் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.