கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் ஜப்பான் மலர்களை நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள், சுற்றுலாத் தலங்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
கோத்தகிரி சாலையோரங்கள், சுற்றுலாத் தலங்கள், தேயிலைத் தோட்டங்கள், குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஜப்பான் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவற்றை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் பார்த்து ரசிக்கின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிழல் தரும் மரமாகவும், தேயிலைத் தோட்டங்களை அழகுபடுத்தவும், வேலிக்காகவும் ஜப்பான் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த மரங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மலர்கள் பூக்கும். அப்போது மரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்து, மலர்கள் மட்டும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும். இதனால் மரம் முழுவதும் அழகாகக் காட்சியளிக்கும்.