தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்தின் (உபாசி) 126 ஆவது கருத்தரங்கம் குன்னூரில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறுகிறது.
குன்னூரை தலைமையிடமாக கொண்டு தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இச்சங்கத்தின் சார்பில் மாநாடு, கருத்தரங்கம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 126 ஆவது மாநாடு உபாசி அரங்கில் வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறுகிறது.
இதில் தொழில் துறைக் கண்காட்சி, தேயிலை, காபி, ரப்பர், வாசனை திரவியங்கள் குறித்த தோட்டப் பயிர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது.
இதில் என்.ஐ.டி.ஐ. தேசிய பயிற்சி மைய உறுப்பினர் ரமேஷ் சந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறந்த தேயிலைக்கான 15ஆவது "கோல்டன் லீப்' விருதுகள் வழங்கி பேசுகிறார்.
தோட்ட தொழிலில் உள்ள பிரச்னைகள், எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாக உபாசியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.