ஜெருசலேம் புனிதப் பயணம் செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க வரும் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ. 20 ஆயிரம் வீதம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தன் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் அனைத்துப் பிரிவினர்களை உள்ளடக்கிய கிறிஸ்தவர்களில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் உள்பட 600 பேர் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்புனிதப் பயணம் இஸ்ரேல், எகிப்து, ஜோர்டன் ஆகிய நாடுகளிலுள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டன் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்துவ மதம் தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்பயணம் 2019 செப்டம்பர் முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக் காலம் 10 நாள்கள் வரை இருக்கும்.
இதற்கான விண்ணப்பப் படிவம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இருந்து கட்டணமின்றி பெற்றுக்கொள்ளாலம். தவிர இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான காலக்கெடு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம், சிறுபான்மையினர் நல இயக்குநரகம் தொலைபேசி எண் 044-2850033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.