கூடலூர், பந்தலூர் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், பந்தலூர்- அத்திமா நகரில் குடிநீர்க் கிணற்றை புதன்கிழமை இரவு காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தியுள்ளன.
பந்தலூர் வட்டத்தில் கடும் வறட்சி காரணமாக நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கு போதிய நீர் கிடைப்பதில்லை. இதனால் குடியிருப்புப் பகுதிக்குள் அவை நுழைந்து சேதப்படுத்த தொடங்கிவிட்டன.
செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் குடிநீர் தேடி அத்திமா நகருக்குள் வந்த யானைகள், அங்கிருந்த நகராட்சியின் குடிநீர்க் கிணறு, தொட்டியைத் தாக்கி உடைத்துள்ளன. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.