கொடநாடு எஸ்டேட் விவகாரம்: வழக்கு விசாரணை ஏப். 26க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை விவகார வழக்கு இம்மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை விவகார வழக்கு இம்மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் உள்ள  எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  விசாரணையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  10 பேரும் ஆஜராகினர்.
இவர்களில்  தற்போது சிறையில் உள்ள தீபு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மாவட்ட நீதிபதி வடமலையிடம் மனு அளித்தார். அந்த  மனுவை நிராகரித்த நீதிபதி பி.வடமலை, வழக்குரைஞர் மூலம் ஜாமீன் மனு தாக்கல் செய்யயுமாறு அறிவுறுத்தினார். 
பின்னர், இவ்வழக்கின் விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு நீதிபதி  ஒத்திவைத்ததோடு, அன்றைய தினம் அனைவரும் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து சிறையில் இருந்தவர்களின் காவலை ஏப்ரல் 26ஆம் தேதி வரை நீட்டித்து  நீதிபதி வடமலை உத்தரவிட்டார். அதையடுத்து, தற்போது கோவை மத்திய சிறையிலுள்ள மனோஜ்,  மனோஜ்சாமி, பிஜின், தீபு ஆகியோரை போலீஸார் கோவை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.  அவர்களைத் தொடர்ந்து, குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியான சயன் பலத்த பாதுகாப்புடன் தனி வாகனத்தில் கோவை அழைத்துச் செல்லப்பட்டார்.
மனோஜ் சாமிக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அவருக்கு யாரும் பிணை அளிக்காததால் அவர் சிறையிலேயே உள்ளார். அவரது மனைவி தன்னை பிணைதாரராக ஏற்றுக்கொள்ளுமாறு உதகை நீதிமன்றத்தில் மனு அளித்தார். இம்மனுவைப் பரிசீலித்தபின் தகுந்த உத்தரவு சிறைக்கு அனுப்பப்படும் என்று நீதிபதி பி.வடமலை தெரிவித்தார். எனவே, மனோஜ்சாமி மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com