கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டவர்களில் (எதிரி) ஒருவரான வாளையாறு மனோஜ் புகார் தெரிவித்துள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சயன், மனோஜ், உதயன், பிஜின் குட்டி, சதீஷன், தீபு, மனோஜ்சாமி, சந்தோஷ் சாமி, ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 5 பேர் சிறையிலும், 5 பேர் ஜாமீனிலும் உள்ளனர். இவர்களில் முக்கிய எதிரியான சயன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவ்வழக்கு உதகை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி வடமலை முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராகினர். அதையடுத்து இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மாவட்ட நீதிபதி பி.வடமலை உத்தரவிட்டார்.
பின்னர் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த வாளையாறு மனோஜ், "கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் கொலை மிரட்டல் உள்ளது. இரு மலையாளிகள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதால் எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்' என செய்தியாளர்களை நோக்கி கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறினார்.
இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரான முன்னாள் அரசு வழக்குரைஞர் ஆனந்த் கூறுகையில், "வாளையாறு மனோஜ் தற்போது கூறியுள்ள கருத்தையடுத்து இந்த வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் மனு தாக்கல் செய்யப்படும்' என்றார்.
இச்சம்பவத்தால் உதகை நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.