தீபாவளி பண்டிகைக்காக நீலகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை வைக்க விரும்புவோர் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அக்டோபர் 27 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விரும்புபவர்கள் தமிழ்நாடு வெடிபொருள்கள் சட்டத்தின்கீழ் தற்காலிக உரிமம் பெற உரிமக் கட்டணம் ரூ.500, இணையதள விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகியவற்றை செலுத்தி ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மற்றும் இ-சேவை மையங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பத்துடன் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் கோரும் கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடங்கள்ஆகியவற்றுடன் தற்காலிக உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளரே விண்ணப்பதாரராக இருப்பின் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது நகல் ஆகியவற்றையும், உரிமம் கோரும் இடம் வாடகை கட்டடம் எனில் ஒப்பந்த பத்திரம், வரி செலுத்திய ரசீது மற்றும் கட்டட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் அனுமதி கடிதம் ஆகியவற்றையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.