கேரளத்தில் இருந்து கூடலூருக்கு சுற்றுலா வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார். மேலும், இருவர் காயமடைந்தனர்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், கருவாரங்குண்டு பகுதியில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த கார் கூடலூரை அடுத்து நடுகூடலூர் மசூதி எதிரே இருந்த குறுகிய வளைவில் சனிக்கிழமை அதிகாலை திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் அருகே உள்ள கருவாரங்குண்டு பகுதியைச் சேர்ந்த அகமது கோயா மகன் முகமது அக்ரம் செய்யது (33) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் தீபு (30), மொய்தீன் மகன் சமீர் (33) ஆகியோர் விபத்தில் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து கூடலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.