நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையின்போது, குத்தகை நிலங்களில் விவசாயம் செய்து பாதிக்கப்பட்டோருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையின்போது குருத்துக்குளி பகுதியில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டு உயிரிழந்த விமலா, சுசீலாவின் உறவினர்களை வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், பின்னர் மழை, வெள்ளத்தால் மூழ்கிய விவசாய நிலங்களைப் பார்வையிட்டார். பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். நிலமற்ற விவசாயிகள் குத்தகைக்கு நிலங்களை எடுத்து விவசாயம் செய்து பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை உடனடியாக விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.
ஆய்வின்போது கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலர் சகாதேவன், இணை செயலர் ஜெயகுமார், பொருளர் பிரேம்நாத் பீமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.