டேராடூனில் உள்ள இந்திய ராஷ்டிரிய ராணுவக் கல்லூரியில் 8ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய ராஷ்டிரிய ராணுவக் கல்லூரியில் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 8ஆம் வகுப்பில் சேர்வதற்கான தேர்வு 2019ஆம் ஆண்டு டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டும் கொண்டதாக இருக்கும்.
விண்ணப்பதாரர்கள் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள ஜூலை 1ஆம் தேதியன்று 11 வயது முதல் 13 வயதுக்கு உள்பட்டவர்களாகவும், 7ஆம் வகுப்பு பயின்று வரும் அல்லது தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆண் மாணவர்களாôகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டை கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரி, டேராடூன்-248 003, உத்தரகண்ட் மாநிலம் என்ற முகவரிக்கு உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை- 3 என்ற முகவரிக்கு செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
இத்தேர்வுகள் தொடர்பான கூடுதல் விபரங்களை இணையதளம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம். இத்தேர்வில் தகுதியுள்ள நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறார்கள்
விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.