நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்குப் பின் கடந்த சில நாள்களாக இயல்பு நிலை திரும்பி வந்த நிலையில் உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பெய்த தொடர் கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்தும் முடங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் உதகை நகர், குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை குறைந்தது. இதையடுத்து இயல்பு நிலை திரும்பியது. இந்நிலையில் உதகை, குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிரும் நிலவுகிறது.