நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள், விவசாயிகள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அரசுத் துறையினர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரங்கள் தொடர்பாக கூட்டம் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 21 மனுக்கள் மீதும் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
அதைத் தொடர்ந்து தோட்டக்கலைத் துறையின் மூலம் நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மானியத்தில் பவர் மோட்டார் வழங்குவது குறித்து அரசுக்கு பிரேரணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அரசிடமிருந்து உரிய ஆணை மற்றும் நிதி ஒதுக்கீட்டுக்கான உத்தரவு கிடைத்ததும் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியத்தில் உருளைக்கிழங்கு விதை வழங்குவது குறித்தும் அரசுக்கு பிரேரணை அனுப்பப்பட்டுள்ளதாகவும், அரசிடமிருந்து உரிய ஆணை மற்றும் நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை குறித்து நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதேபோல, விவசாயிகளின் பல்வேறு பொதுக் கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு தீர்வு
காணப்பட்டது.