நீலகிரி மாவட்டம், கூடலூரில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் பாலை தடை செய்ய வேண்டும் என நீலமலை விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கூடலூர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் கூடலூரில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு பால் வழங்கி வந்தனர்.
இந்நிலையில், சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கே தெரியாமல் கர்நாடக மாநிலத்தில் இருந்து கூடலூருக்கு பால் கொண்டு வந்து சங்கத்தின் பணியாளர்களை வைத்தே வியாபாரம் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த ஆண்டிலேயே புகார் தெரிவிக்கப்பட்டிருந்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கர்நாடகத்தில் இருந்து கூடலூருக்கு தொடர்ந்து பால் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை விட்டே விவசாயிகள் வெளியேறி விட்டனர்.
உள்ளூரிலேயே பால் உற்பத்தி அதிகரித்து உள்ள நிலையில் கர்நாடகத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் பால் கொண்டு வந்து விற்பனை செய்ய வேண்டிய அவசியமில்லை.
எனவே, இதுதொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.