நீலகிரி மாவட்டத்தில் விபத்துக்கு காரணமாக சாலையோரங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள கற்பூர மரங்களை அகற்ற வேண்டும் என்று எக்ஸ்னோரா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் நீலகிரி மாவட்டத் தலைவர் எம்.கண்ணன் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையில் பெய்யும் மழை மற்றும் காற்றின்போது மரங்கள் விழுந்து விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இது போன்ற விபத்துகள் ஏற்பட காரணம் உயர்ந்து வளர்ந்து நிற்கும் கற்பூர மரங்களே ஆகும்.
ஒரு சில பகுதிகளில் மட்டுமே சோலை மரங்கள் காற்றின்போது விழுகின்றன. ஆனால், 99 சதவீதம் கற்பூர மரங்களாலேயே விபத்து ஏற்படுகிறது. கற்பூரம் மற்றும் சீகை மரங்கள் ஆகியவை அந்நிய தாவரப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மரங்கள் பூமியில் உள்ள தண்ணீரை உறிஞ்சி ஆவியாகவே வெளியிடுகிறது. சீகை மரங்களால் புல்வெளிகள் பாதிக்கப்படுவதாலும் தற்போது வனத் துறையினர் இவைகளை அழிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலையில் இந்த மரங்களை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மஞ்சூர், நுந்தளா, கைகாட்டி, சாம்ராஜ் போன்ற பகுதிகளில் சாலையோரங்களில் அதிக அளவில் கற்பூர மரங்கள் வளர்ந்துள்ளன.
குறிப்பாக, குடியிருப்புகள் அருகே வளர்ந்துள்ள கற்பூர மரங்களை அகற்ற வனம் மற்றும் வருவாய்த் துறையினர் சட்டத்தை எளிமையாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.