உதகையில் பெண் காரில் அழைத்து வந்த நாய் ஒருவரைக் கடித்தது. இதைத் தட்டிக் கேட்ட பொதுமக்களை நாயை விட்டு கடிக்க வைக்க அந்தப் பெண் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை கணேஷ் தியேட்டர் அருகே கோவா பதிவு எண் கொண்ட காரை பெண் ஒருவர் சனிக்கிழமை ஓட்டி வந்தார். காரில் அவரது குழந்தையும், ராட்வீலர் ரக நாயும் இருந்தது. காரில் இருந்து இறங்கிய அந்தப் பெண் அருகே இருக்கும் சலவை கடைக்குச் சென்றார்.
அப்போது கார் அருகே நடந்து சென்ற விஜய் என்பவரை காருக்குள் இருந்த நாய் கடித்தது. அவரின் அலறல் சப்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு கூடினர். இதுகுறித்து அந்தப் பெண்ணிடம் பொதுமக்கள் கேட்டபோது கோபமடைந்த அந்தப் பெண் ஆங்கிலத்தில் வசைபாடி காருக்குள் இருந்த நாயை வெளியே கொண்டுவந்து கடிக்க வைத்துவிடுவதாக அனைவரையும் பயமுறுத்தினார்.
இதனால் கோபமடைந்த பொதுமக்கள், பெண்ணின் காரை வெளியே செல்லவிடாமல் தடுப்பு ஏற்படுத்தி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் வருவதில் தாமதம் ஏற்படவே அந்தப் பெண் மீண்டும் மீண்டும் நாயை ஏவிவிட்டு பொதுமக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கல், கட்டைகளை எடுத்துக்கொண்டு அடிக்கத் தயாராகினர்.
சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்த காவல் துறையினர் நாய் கடிபட்ட விஜயை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நாயின் உரிமையாளரான அந்தப் பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.