உதகையில் உள்ள நகராட்சி மகளிர் மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவத் துறையினருடன் இணைந்து கேத்திவேலி இன்னர்வீல் சங்கத்தின் சார்பில் தாய்ப் பால் வார தொடக்க விழா மற்றும் கர்ப்பிணிகளுக்கான வளைகாப்பு விழாவும் நடைபெற்றது.
உதகை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முருகேசன் தலைமையில் உதகையில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள உதகை நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உதகை நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் முரளிசங்கர், கேத்திவேலி இன்னர்வீல் சங்கத் தலைவி காவ்யா வேணுகோபால், செயலர் பிரியா ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்தி நிகழ்ச்சியில் டாக்டர் முருகேசன் பேசுகையில், தாய்ப் பாலின் அவசியத்தையும் , தாய்ப் பால் கொடுப்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விவரித்தார்.
அதேபோல, நகராட்சியின் நகர் நல அலுவலர் டாக்டர் முரளி சங்கர் பேசுகையில், கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் பயமின்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், எளிய வைத்திய முறைகள் குறித்தும் விளக்கினார்.
அதைத்தொடர்ந்து கேத்திவேலி இன்னர்வீல் சங்கத்தின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு மல்லிகைப்பூ, குங்குமம், மஞ்சள், இனிப்புகள், வளையல், உல்லன் தொப்பிகள், ஸ்கார்ப், காலுறைகள், ஊட்டச்சத்து உணவுகள் உள்ளிட்டவற்றுடன் சுகாதார கையேடு வழங்ப்பட்டது.
அதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த தினத்தையொட்டி மருத்துவமனை தினமும் அனுசரிக்கப்பட்டது.