வறட்சிக் காலங்களுக்கான நிவாரண உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று தேயிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 65ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரமாக தேயிலை சாகுபடி உள்ளது. ஏற்கெனவே பச்சைத் தேயிலைக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு, உறைபனித் தாக்கம் காணப்படும். இந்தக் காலத்தில் ஏற்படும் கடும் வறட்சியில் தேயிலைத் தோட்டங்களில் பசுந்தேயிலை வரத்து அடியோடு குறைந்து போகும்.
பச்சைத் தேயிலை வரத்து பாதிப்பால் விவசாயிகள் தங்களது அன்றாட குடும்பச் செலவினங்களை சமாளிக்க முடியாத நிலை ஏற்படுவதுடன், தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. எனவே டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான வறட்சிக் காலத்தைக் கருத்தில் கொண்டு தேயிலை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.