உத்தரப்பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் உதகை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
லக்னௌவில் உள்ள கே.டி.சிங் பாபு உள் விளையாட்டரங்கில் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் கடந்த 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 700 பேர் பங்கேற்றனர். இப்போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் மாஸ்டர் அர்ஜுன் தலைமையிலான வீரர்கள் பங்கேற்றனர்.
உதகை அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை கணினி அறிவியல் படித்து வரும் ஷாமலா, மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் தேசிய அளவில் முதலிடத்தையும், வணிகவியல் இளங்கலை முதலாமாண்டு படித்துவரும் லோகேஸ்வரன் 59 கிலோ எடைப்பிரிவில் தேசிய அளவில் முதலிடத்தையும், வன விலங்கியல் பாடப்பிரிவில் முதுகலை இரண்டாமாண்டு படித்து வரும் தமிழ்செல்வன் 63 கிலோ எடைப்பிரிவில் தேசிய அளவில் மூன்றாமிடத்தையும் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்கள் மூவரும் உதகை அரசு கலைக் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இம்மாணவர்கள் மூவரையும் கல்லூரியின் முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, பொறுப்பு முதல்வர் எபினேசர், துணை பேராசிரியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.