முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதிக்குள் தீ மூட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்குள் அண்மையில் ஏற்பட்ட தீ, தமிழகத்தில் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள்ளும் புகுந்ததில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவிலான வனப் பகுதிகள் எரிந்து சாம்பலாயின.
இதைத் தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் தீத்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, ரோந்துப் பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதில் மசினகுடி வனச் சரகத்தின் சார்பில் வனச் சரகர் மாரியப்பன் தலைமையிலான வனத் துறையினர் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாவனல்லா பகுதியில் வனத்துக்குள் ஒரு நபர் தீ மூட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர்.
உடனடியாக அங்கு விரைந்து சென்று அந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது அவர் மசினகுடியைச் சேர்ந்த பாப்பன் என்பவரது மகன் சுந்தரம் (45) என்பதும், கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக இப்பகுதியில் தீ மூட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரை உடனடியாக மசினகுடி வனச் சரக அலுவலகத்துக்கு அழைத்து வந்த வனத் துறையினர் அவரை கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின் கோவை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைத்தனர்.