கூடலூரில் முறையான ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சனிக்கிழமை பறிமுதல் செய்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் கூடலூரில் உள்ள கேரளம் மற்றும் கர்நாடக எல்லைகளில் பறக்கும் படை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தொரப்பள்ளம் பகுதியில் ஊரக வளர்ச்சி முகமையின் உதவித் திட்ட அலுவலர் சிவசண்முகம் தலைமையில் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளத்தில் இருந்து கர்நாடகத்துக்குச் சென்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் உரிய ஆவணமில்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்தைப் பறிமுதல் செய்து, கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அந்தப் பணம் கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.