மக்களவைத் தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக மேற்கொண்ட வாகனச் சோதனைகளில் ரூ. 1.60 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 20 பேரிடமிருந்தும், உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் 9 பேரிடமிருந்தும், குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் மூவரிடமிருந்தும் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
உதகையில் ஒரு பொதுத் துறை வங்கியின் சார்பில் ஏடிஎம் மையங்களில் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ரொக்கமும் அடங்கும். சனிக்கிழமை இரவு வரை உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக ரூ. 84 லட்சத்து 79, 420, கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 41 லட்சத்து 35,000, குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 3 லட்சத்து 35,000 என மாவட்டத்தில் மொத்தம் ரூ.1 கோடியே, 29 லட்சத்து 49,920 ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 14,390 மதிப்பிலான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட
இத்தொகைகளில் சனிக்கிழமை இரவு வரை மொத்தம் ரூ. 6 லட்சத்து 90,510 விடுவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனைகளில் ரொக்கம் ஏதும் கைப்பற்றப்படவில்லை.