உலக சிட்டுக் குருவிகள் தினம் மார்ச் 20 ஆம் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படும் நிலையில், அழிந்து வரும் குருவி இனங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மணிவண்ணன், பறவைகள் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர் ரியாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டமாகும். 55 சதவீதம் வனப் பகுதிகளைக் கொண்ட இப்பகுதியில் யானை, கரடி, மான், புலி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் எண்ணிலடங்கா பறவை இனங்களும் வாழ்ந்து வருகின்றன. இவற்றில் தற்போது சில பறவை இனங்களைக் காண்பது அரிதாகி வருகின்றது. இதில் சிட்டுக் குருவி இனங்கள் அழிந்து வரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. செல்லிடப் பேசிக் கோபுரங்களில் இருந்து வரும் கதிர் வீச்சே இவற்றின் அழிவுக்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.
இதனால் அதிகாலை நேரங்களில் கேட்கும் இனிமையான பறவைகளின் சப்தம் கேட்பது குறைந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கூரை வேய்ந்த வீடுகள் இருந்ததால், இதில் சிறு பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. தற்போது பெரும்பாலான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் கான்கிரீட் கட்டடங்களாய் மாறிவிட்டதால் இவை அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்றனர்.