குன்னூர் டீசர்வ் ஏலத்தில் ரூ.1.38 கோடிக்கு தேயிலை, தேயிலைத் தூள் ஏலம் போனது.
கடந்த வாரத்தைவிட விற்பனை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
குன்னூர் டீசர்வ் ஏல மையத்தில், நீலகிரி கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலைத் தூள் ஏலம் விடப்படுகிறது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற 18ஆவது ஏலத்தில் இலை ரகம், 75 ஆயிரத்து 648 கிலோ, டஸ்ட் ரகம் 77 ஆயிரத்து 281 கிலோ, என, மொத்தம், 1 லட்சத்து 52 ஆயிரத்து 929 கிலோ விற்பனைக்கு வந்தது.
இரு ரகங்களும், 100 சதவீதம் விற்பனையானது. சராசரி விலையாக கிலோ ரூ. 90.31 ஆக இருந்தது. இலை ரகத்தில், மஞ்சூர், குந்தா, டஸ்ட் ரகத்தில் பந்தலூர், சாலீஸ்பெரி ஆகிய தொழிற்சாலைகளை தவிர மற்ற தொழிற்சாலைகளின் தேயிலைத் தூள் வரத்து வெகுவாக குறைந்தது. டீ சர்வீஸ் இந்தியா லிமிடெட் நிறுவன தேயிலைக்கு அதிகபட்சமாக கிலோ ரூ. 101. 50-க்கு விற்பனையானது. ஏலத்தில் மொத்தம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 9 ஆயிரத்து 538-க்கு தேயிலைத் தூள் விற்பனையானது.
இது கடந்த வாரத்தை விட ரூ. 22 லட்சத்து 74 ஆயிரத்து 910குறைவாகும். விற்பனை சரிவடைந்ததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.