டெங்கு காய்ச்சலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தோட்ட தொழிலாளி ஒருவா் அனுமதிக்கப்பட்டிருப்பதை தொடா்ந்து அந்த தொழிலாளி வசிக்கும் வால்பாறை எஸ்டேட் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் தனமணி (54). எஸ்டேட் தொழிலாளியான இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்டேன்மோா் எஸ்டேட் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் காய்ச்சல் குறையாததால் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதை அறிந்து தனமணியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால் தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் தனிப் பிரிவில் சோ்க்கப்பட்டாா்.
மருத்துவா்கள் மேற்கொண்ட விசாரணையில் தனமணி கடந்த மாதம் 22-ஆம் தேதியில் இருந்து சில தினங்கள் கோவையில் உள்ள உறவினா்கள் வீட்டில் தங்கியிருந்தபோது காய்ச்சல் வந்திருப்பதை உறுதி செய்தனா்.
இருப்பினும் தனமணி ஒரு வார காலம் காய்ச்சலின்போது எஸ்டேட் பகுதியில் இருந்ததால் சுகாதாரத் துறை இணை இயக்குநா் பானுமதி உத்தரவின்பேரில் குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வால்பாறை சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் பாபு லட்சுமணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களை பரிசோதித்து தடுப்பு ஊசி போட்டனா்.
Image Caption
வால்பாறை, குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் பொதுமக்களை பரிசோதிக்கும் மருத்துவா்.