நீலகிரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் பல்வேறு இடங்களில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன. இதனை அந்த வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்ந்து பெய்த மழை காரணமாக இங்குள்ள மலைகளில் தேங்கிய நீர் தற்போது அருவிகளாகக் கொட்டத் துவங்கி உள்ளன.
மலை முகடுகளில் இருந்து ஆங்காங்கே கொட்டி வரும் இந்த அருவிகள் பார்ப்பதற்கு வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல அழகாக காட்சியளிக்கின்றன.
இந்த அருவிகள் பொதுவாக குளிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்றாலும் இவை பசுமையான மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டி வருவது இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த அருவிகள் மழையின் அளவு குறைந்ததும் நின்று விடும் என்பதால் இந்த அருவிகளை காண்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.