உதகையில் பலத்த மழை;  குளுகுளு காலநிலை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் குளு குளு காலநிலை நிலவி வருகிறது.

உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் குளு குளு காலநிலை நிலவி வருகிறது. இதனால் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கனமழையைத் தொடர்ந்து 2ஆம் சீசனுக்கான இயல்பான காலநிலை நிலவியது. 
இந்நிலையில் கடந்த 2 நாள்களாக உதகை, சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது.
இதனால்  தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். திங்கள்கிழமை பிற்பகலில் பெய்த பலத்த மழையின்போது இடி, மின்னலும் இருந்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உதகை சுற்று வட்டாரப் பகுதிகளில் குளுகுளு காலநிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மி.மீ.):  
அவலாஞ்சி 50, கேத்தி 49, மேல்பவானி, கோத்தகிரி தலா 20, பர்லியாறு 15, கொடநாடு 13, குன்னூர் 10, எமரால்டு 9, குந்தா 8, உதகை 7.4, கூடலூர், தேவாலா தலா 5 , கிளன்மார்கன் 4, கெத்தை 3, கிண்ணக்கொரை 2, கல்லட்டி 1 மி.மீ. என மொத்தம் 221.40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

அவலாஞ்சி அணையில் நீர் திறப்பு
தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது. அவலாஞ்சி அணையானது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்புக் கருதி நீர் வெளியேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இதன்படி திங்கள்கிழமை முதல் படிப்படியாக நீர்திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக குந்தா, பில்லூர் போன்ற பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com