நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 199 மனுக்கள் பெறப்பட்டன.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 199 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையில் உள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு துறை ரீதியான அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகள், மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1 பயனாளி என மொத்தம் 5 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 பெறுவதற்கான ஆணை, சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த கூடலூர் வட்ட சின்னசூண்டி பகுதியை சேர்ந்த அருள்முருகன் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை, 31 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் தலா ரூ.1,000 பெறுவதற்கான ஆணை, 4 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.12 ஆயிரத்துக்கான காசோலை, இயற்கை மரண உதவித்தொகை 2 பயனாளிகளுக்கு ரூ.5 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்ணன், உதவி ஆணையர் (கலால்) பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் குருசந்திரன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முகம்மது குதுரதுல்லா, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.