உலக ரேபிஸ் தினத்தை ஒட்டு வெறிநாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் குன்னூர் பாஸ்டியர் ஆய்வகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
முன்னதாக ஆய்வக வளாகத்தில் அமைந்துள்ள லூயி பாஸ்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விநாடி வினா, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
உயிர்க் கொல்லி நோயான ரேபிஸால் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். நாய் கடிப்பதாலேயே மனிதர்களுக்கு 99 சதவீதம் ரேபிஸ் பரவுகிறது. இதில் பாதிக்கப்படுபவர்களில் 50 சதவீதம் பேர் சிறுவர்கள் ஆவர் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
பாஸ்டியர் ஆய்வகத்தில் இருந்து துவங்கிய விழிப்புணர்வுப் பேரணி குன்னூர் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் தென்மண்டல துணைக் கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி குணசேகரன் தலைமை வகித்தார். சென்னையைச் சேர்ந்த பி.சி.ஜி. நிறுவன அதிகாரி சேகர், பட்டுப் பூச்சி நிலைய டாக்டர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரிவர்சைடு பள்ளி முதல்வர் பிரான்சிஸ் சேவியர், டாக்டர் இல்லோனா ஒட்டர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.