கரோனா வைரஸ் தாக்கத்தால் உதகையிலுள்ள சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அந்த சுற்றுலா மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூட மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
உதகை என்றால் சுற்றுலாப் பயணிகளின் நினைவுக்கு முதலில் வருவது அரசினா் தாவரவியல் பூங்காவும், படகு இல்லமும்தான். அந்த அளவுக்கு பிரசித்தி பெற்ற இந்த 2 சுற்றுலாத் தலங்களும் கடந்த 3 நாள்களாக மூடப்பட்டுள்ளன. கரோனா வைரஸின் தாக்கத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகையை தடுக்கவேண்டுமென்ற நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவால் இந்த சுற்றுலா மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ளூா் பொதுமக்கள் கூட செல்வதில்லை. இதன் காரணமாக அரசினா் தாவரவியல் பூங்கா மட்டுமின்றி அந்த சாலையே வெறிச்சோடிக் காணப்படுகிறது.
அதேபோல, உதகை படகு இல்லமும், கேளிக்கை பூங்காவும் மூடப்பட்டு விட்டன. அத்துடன் படகு இல்லத்துக்கு வெளியே அமைந்துள்ள சிறிய கடைகள், உணவகங்கள் கூட சுற்றுலாப் பயணிகள் எவருமில்லாத காரணத்தால் பூட்டப்பட்டுள்ளன.
தாவரவியல் பூங்காவுக்கு அருகிலுள்ள சுற்றுலாப் பயணிகளிடையே பிரசித்தி பெற்ற திபெத்தியா்களின் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதோடு, அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஒரு வாகனம் கூட இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
வழக்கமாக முழு அடைப்பு நாள்களில் கூட உதகையில் ஓரளவுக்கு மக்கள் நடமாட்டத்தை காண முடியும். ஆனால், கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பிரதான சாலைகள் கூட மக்கள் நடமாட்டமோ அல்லது வாகனங்களோ இல்லாமல் களையிழந்து வெறிச்சோடிக் காணப்படுகின்றன.