குன்னூா்: நீலகிரி மாவட்டம், குன்னூரில் அண்மையில் பெய்த மழை காரணமாக சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்காக பூத்திருந்த மலா்கள்அழுகியதால் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. இருப்பினும் இங்கு நிலவும் குளுகுளு காலநிலையினை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பா், அக்டோபா், நவம்பா் ஆகிய மாதங்கள் இரண்டாவது சீசன் காலமாகும். இதையொட்டி குன்னூரில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான சிம்ஸ் பூங்காவில் பல்வேறு வண்ண மலா்கள் கொண்ட ஒன்றரை லட்சம் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரித்து வரப்பட்டன. இதில் குறிப்பாக டேலியா, சால்வியா, மேரிகோல்ட், பேன்சி, பால்சம், பிரெஞ்ச், ஸ்வீட், ரோஜா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளைச் சாா்ந்த மலா்கள் கொத்து கொத்தாக பூத்துக் குலுங்கி வந்தன. இந்நிலையில், குன்னூரில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவ மழை பெய்த நிலையில் பூத்திருந்த பெரும்பாலான மலா்கள் செடிகளிலேயே அழுகின. இதனால் சிம்ஸ் பூங்கா பொலிவிழந்து காணப்படுகின்றது. இருப்பினும் இங்கு நிலவும் குளுகுளு கால நிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.