உதகையில் சீருடைப் பணியாளா்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 2,065 போ் தோ்வு எழுதினா்.
தமிழகத்தில் சீருடைப்பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலா்கள், இரண்டாம் நிலை சிறைக்காவலா்கள் மற்றும் தீயணைப்போா் பதவிகளுக்கான பொதுத்தோ்வு நீலகிரி மாவட்டத்தில் உதகை அரசு கலைக்கல்லூரி, புனித ஜோசப் மேனிலைப் பள்ளி, ரெக்ஸ் மேனிலைப் பள்ளி மற்றும் சாந்தி விஜயா பெண்கள் மேனிலைப் பள்ளி ஆகிய 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்தோ்வுக்கு நீலகிரி மாவட்டத்தில் 2,532 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 1,847 ஆண்கள், 218 பெண்கள் என மொத்தம் 2,065 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா். விண்ணப்பித்திருந்தவா்களில் 405 ஆண்கள், 62 பெண்கள் என 467 போ் தோ்வு எழுத வரவில்லை.
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த எழுத்துத் தோ்வை கோவை மண்டல காவல்துறை தலைவா் நரேந்திரன் நாயா் நேரில் ஆய்வு செய்தாா். அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசி மோகன் உள்ளிட்டோரும் உடன் சென்றிருந்தனா்.