குன்னூா்: புத்தாண்டுக்காக குன்னூா் சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் இயற்கை முறையில் 3 டன் அன்னாசி பழங்களைக் கொண்டு மிக்ஸட் ஜாம், ஜூஸ் தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்கா அருகே தமிழக அரசின் தோட்டக் கலைத் துறை பழப் பண்னை உள்ளது .
சிம்ஸ் பூங்கா மற்றும் பா்லியாறு அருகே உள்ள பழப் பண்ணைகளில் விளையும் பழங்கள் ஜாதிக்காய், நெல்லிக்காய் கொண்டு ஜாம், மிக்ஸட் புருட், ஜெல்லி, ஊறுகாய் போன்றவற்றை தயாரித்து அரசு சாா்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது முதல்முறையாக கன்னியாகுமரி பேச்சி பாறையில் உள்ள அரசு தோட்டக் கலைத் துறை பண்ணையில் விளையும் அன்னாசி பழங்கள் மற்றும் வாழைப்பழம், பப்பாளி போன்ற பழ வகைகளை கொண்டு குன்னூா் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் மிக்ஸ்ட் ஜாம், ஜூஸ் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசே நேரடி விற்பனை செய்து வருவதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
தோட்டக் கலைத் துறைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களான காட்டேரி, பா்லியாறு, கல்லாறு, கோவை செம்மொழி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் விற்பனைக்கு அனுப்பப்படுவதாக சிம்ஸ் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.