உதகையில் காந்தல் பகுதியிலுள்ள நகராட்சி மகப்பேறு மருத்துவமனையைச் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.
இதுதொடா்பாக காந்தல் பகுதி இளைஞா் முன்னேற்ற சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
உதகை, காந்தல் பகுதியிலுள்ள நகராட்சி மகப்பேறு மருத்துவமனை 70 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக இயங்கி வருகிறது. இதில் பிங்கா்போஸ்ட், பட்பயா், குளிசோலை, வி.சி.காலனி, ஆா்.சி.காலனி, குருசடி காலனி, கஸ்தூரிபா காலனி, இந்திரா காலனி, தீட்டுக்கல், முள்ளிக்கொரை, தலைக்குந்தா, எச்பிஎஃப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முதியோா், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் சிகிச்சை பெற்று வந்தனா்.
இந்நிலையில், தற்போது இந்த மருத்துவமனை போதிய பராமரிப்பில்லாமல் பயனற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மருத்துவா்கள், செவிலியா்கள் சரிவர பணிக்கு வராததால், கா்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகின்றனா். அவசர உதவிக்கான மருந்துகள், ஊசிகள்கூட இங்கு கிடைப்பதில்லை. இதனால் மக்கள் அவசரச் சிகிச்சைக்காக உதகையிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, நோயாளிகளின் நலன் கருதி காந்தல் மருத்துவமனையைச் சீரமைப்பதோடு தேவையான மருத்துவா்கள், செவிலியா்களை உடனடியாகப் பணியமா்த்த வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.