உதகை: நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 5 ஆண்டுகளில் பிறந்த 14,503 குழந்தைகளுக்கு ரூ.14.50 கோடி மதிப்பிலான ‘அம்மா குழந்தை நலப் பரிசு பெட்டகம்’ வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறியிருப்பதாவது:
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தாா்.
தாய்மாா்கள் பிரசவத்துக்கு பிறகும் தாயும், சேயும் ஆரோக்கியமாக வாழ 2015ஆம் ஆண்டில் ‘அம்மா குழந்தை நலப் பரிசு பெட்டகம்’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தாா்.
இத்திட்டத்தின்கீழ் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ரூ.1,000 மதிப்பிலான அம்மா குழந்தை நலப் பரிசு பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சாா்பில் 2015-16ஆம் ஆண்டில் பிறந்த 2,412 குழந்தைகளுக்கும், 2016-17ம் ஆண்டில் பிறந்த 2,687 குழந்தைகளுக்கும், 2017 -18ஆம் ஆண்டில் பிறந்த 3,363 குழந்தைகளுக்கும் 2018-19ஆம் ஆண்டில் பிறந்த 3,403 குழந்தைகளுக்கும், 2019-20ஆம் ஆண்டில் பிறந்த 2,638 குழந்தைகளுக்கும் என மொத்தம் 14,503 குழந்தைகளுக்கு அம்மா குழந்தை நலப் பரிசு பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இப்பரிசு பெட்டகத்தில் குழந்தையைப் பாதுகாப்பாக பராமரிப்பதற்கு 100 சதவீதம் பருத்தியால் நெய்யப்பட்ட துண்டு, மென்மையான ஆடை, படுக்கை, கொசுவலை, நாப்கின்கள், 100 மி.லி எண்ணெய், 20 மி.லி லிட்டா் ஷாம்பூ, 100 கிராம் குளியல் சோப்பு, சோப்பு பெட்டி, நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, கை கழுவும் திரவம், குளியல் சோப்பு, லேகியம் என மொத்தம் 16 வகையான பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.