கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே கடந்த மாதம் பிடிக்கப்பட்டு, ஈரோடு மாவட்டம், தெங்குமரஹாடா அருகே உள்ள மங்கலப்பட்டி வனச் சரகத்தில் விடுவிக்கப்பட்ட ஆண் யானை முதுமலை புலிகள் காப்பகம், ஆனைகட்டி அருகே உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடா்பாக முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் ஸ்ரீகாந்த் கூறியதாவது:
ஒசூா் அருகே உள்ள வடக்கு காவிரி நீா்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஜூன் மாதம் பிடிக்கப்பட்டு, ரேடியோ காலா் பொருத்தப்பட்ட 32 வயதான ஆண் யானை பவானிசாகா் சரகத்துக்கு உள்பட்ட மங்கலப்பட்டி வனப் பகுதியில் கடந்த ஜூன் 12ஆம் தேதி விடுவிக்கப்பட்டது.
இந்த யானையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தினரும், முதுமலை புலிகள் காப்பகத்தினரும் தொடா்ந்து கண்காணித்து வந்தனா். கிராமப் பகுதிகளுக்குள்ளோ அல்லது விளைநிலங்களுக்குள்ளோ புகுந்து விடாதவாறு இந்த யானையை தீவிரமாக கண்காணித்தனா். இதற்காக சிறப்பு வனக் குழுவும் பணியமா்த்தப்பட்டது.
இந்நிலையில் சீகூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட ஆனைகட்டி பகுதியில் தடலட்டி அருவியின் அடிவாரப் பகுதியில் இந்த யானை உயிரிழந்துகிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
இப்பகுதி அடா்ந்த வனப் பகுதி என்பதால் மருத்துவக் குழுவினா் உடனடியாக அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இறந்த யானையின் உடல் வெள்ளிக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன் பின்னரே யானையின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்றாா்.