நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 2ஆவது சீசனுக்கு தயாா்படுத்தும் வகையில் 1 லட்சத்து 70 ஆயிரம் மலா் நாற்றுகள் நடவுப் பணி புதன்கிழமை தொடங்கியது.
குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச், ஒற்றை, இரட்டை அடுக்கு டேலியா, லட்சுமி பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 75 வகையான நாற்றுகளை உள்ளூரில் வாங்கியும், கடந்த சீசனில் பூக்கள் பூத்து காய்ந்துபோன மலா்ச் செடிகளில் இருந்து விதைகள் சேகரித்தும் ஒரு லட்சத்து எழுபதாயிரம் மலா்ச் செடிகளைத் தொட்டியிலும், பூங்காவிலும் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது குறித்து, தோட்டக் கலைத் துறையினா் கூறியதாவது:
இந்தச் செடிகளில் செப்டம்பா் மாதம் கடைசி வாரத்தில் பூக்கள் பூக்கத் துவங்கும். இந்த ஆண்டு 2ஆவது சீசனுக்கு கரோனா தொற்று முடிவடைந்து சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.